கடவுள் என்றால் என்ன? – 1

மூலம்சுவாமி  தயானந்த சரஸ்வதி (Discourses on certain topics என்ற நூலில் இருந்துதமிழில்: வேதம் கோபால்     

what_is_god

கடவுள் என்ற தலைப்பு நம் எண்ண கருத்தாக்கத்திற்கோ நம் கற்பனையாலோ பேசப்படும் விவாத பொருள் அல்ல. இருப்பினும் இது ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும், ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறாகவே பேசப்பட்டு வருகிறது. கடவுள் யார் என்று ஒருவருக்கும் தெரியாது. இருந்தாலும் எல்லோரும் ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதைபோல் கடவுள் என்ற தத்துவத்தை வசைமாரி பொழிந்ததுபோல் எதையுமே சாடி இருக்கமுடியாது. அதையும் கடவுள் ஒருவரால்தான் கையாளமுடியும். அவரை பல பெயர் சொல்லி அழைக்கின்றோம். கடவுள் தண்டனை அளிப்பவர் என்றும், பயங்கரமானவர் என்றும், அதே நேரத்தில் அவர் அன்பே உருவானவர் என்றும் சொல்லுகிறோம். சில தத்துவங்கள் இரண்டு செய்தியை சொல்லுகிறது – கடவுள் உன்னிடம் அன்பு பாராட்டுகிறார் ஆனால் நீ விழிப்புடன் ஜாக்கிரதையாக நடக்கவேண்டும். இது எப்படி இருக்கின்றது என்றால் நான் அன்பு பாராட்டுவேன், ஆனால் என் கண்களில் படாதே என்பதுபோல். இப்படி கடவுள் பலவாராக விளக்கப்படுகிறார். கடவுள் மறுப்பாளர்கள் கூட நீங்கள் எந்த கடவுளை மறுக்கிறீர்கள் என்றால் அவர்கள் மேல் உலகில் அமர்ந்துகொண்டு இந்த அண்டங்களை கீழே உருட்டி விட்டவராகக் கருதும் கடவுளைத் தான் என்கின்றார்கள். நாமும் அந்த கடவுளை மறுக்கின்றோம். அப்படி ஒரு கடவுள் இல்லை என்பதை நம்மால் நிருபிக்கமுடியும்.

ஒருவர் கடவுள் உண்டு என்றோ அல்லது இல்லை என்றோ சொன்னாலும் அவரது இருப்பு ஒரு புரியாத புதிர்தான். ஆனால் அதைப் புரிந்துகொள்ள நிறைய திட்ட வழிமுறைகளும், இயற்கை நியதிகளும் உள்ளன. இவை பலவானதும் வேறுபாடுகள் கொண்டதும் ஆகும். ஆனால் அதுவே பிரபஞ்சம் ஆகாது. இந்த உலகம் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல இயற்கை நியதிகள் அளிக்கப்பட்டுள்ளன. நமக்கு பௌதீக உடல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளேயே உடல் வளர பல சுழல் செயல்பாடுகள் முறையே அளிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருக்க பிராணவாயு அளிக்கப்பட்டுள்ளது. வயிற்றுப் பசியை போக்க உணவு தேவை, அது தாராளமாக வெளியில் கிடைக்கிறது. இந்த உணவு சக்திகளை தர ஜீரணசக்தி அளிக்கப்பட்டுள்ளது. பல வித உணர்வுகள், உணர்ச்சியை வெளிப்படுத்த சிந்திக்க மூளை, அதன் மூலம் பலவற்றைத் தெரிந்துகொள்ள ஏதுவாக அளிக்கப்பட்டுள்ளது

fig2

சுவாமி தயானந்த சரஸ்வதி

இதனால் நமது தேவைகளை அடைய, சுதந்திரமாக சிந்திக்க, குறிக்கோள்களை அடைய என்று பலவிதமான தெரிந்த இயற்கை நியதிகளும், நமக்கு இருக்கின்றதா என்று தெரியாத இயற்கை நியதிகளும், இருக்கின்றது என்று தெரிந்தும் தெரிந்துகொள்ள முடியாத இயற்கை நியதிகளும் உள்ளன. புதிய கண்டுபிடிப்புகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. எல்லா விஞ்ஞான முன்னேற்றமும் நமக்கு ”அளிக்கப் பட்டதே” ஆகும். உண்மையில் எதுவும் நம்மால் படைக்கப் படவில்லை. ஒரு துளி பொருளை நாம் உணடாக்கவும் இல்லை அழிக்கவும் இல்லை. இப்படி நமது தேவைகள் எல்லாமுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் செயல் முறையும் அதிசயத்தக்கது. இப்படி நமது தேவைகளை அளித்தவர் என்று ஒருவர் நிச்சயம் இருக்கிறார்.

கடவுள் என்றால் என்ன என்ற கேள்வியை நாம் தவிர்க்கமுடியாது. இது உடலோடும், உயிரோடும் ஒன்றியது. உண்மை என்னவென்றால் கடவுள் இப்படித்தான் என்ற எல்லை உடையவர். இதை அவர் அவர் எண்ண ஓட்டத்தின்படி சித்தரிக்கப்படுபவர் அல்ல. ஒன்றும் ஒன்றும் கூட்டினால் மூன்றுதான் என்பது என்நாட்டில் வழக்கம் என்றோ அல்லது ஒனறும் ஒன்றும் கூட்டினால் நான்குதான் எங்கள் கலாசாரம் என்றோ கூறமுடியாது. அதைப்போல் கடவுள் என்ற உண்மைக்கு ஒரு இறுதி தீர்ப்புதான் இருக்கமுடியும். கடவுள் என்பது உண்மை என்றால் நாம் அவரை நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும். கடவுள் என்ற சொல் பல பாதிப்புக்களை உடையதால் புனிதமான சமஸ்கிருத சொல்லான ஈஸ்வரன் என்ற சொல்லை பயன் படுத்துவோம்.

ஈஸ்வரன் என்ற வேதத்தின் பதமே ஒரு வித்தியாசமானது. நான்கு வேதங்கள் முடிவில் வேதாந்தத்தை பற்றி கூறுகையில் இந்த ஈஸ்வரன் பற்றி சில சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் ஈஸ்வரன் என்பதே அறிவிற்கு ஒரு வழிகாட்டியாக பிரமாணமாக உள்ளது. ஈசாவாஸ்ய உபநிடதம் ஈசாவாஸ்யம இதம் சர்வம்” (இங்கே உள்ளது அனைத்தும் ஈசனே) என்கிறதுஎனவே நாமும் அதை அப்படியே உற்று நோக்குவோம். இங்கே இருப்பதெல்லாம் ஈஸ்வரன்தான், ஈஸ்வரன் அல்லாது வேறு ஒன்று இல்லை. நாமும் தூய்மையான எண்ணத்துடன் எல்லாம் ஈஸ்வரன்தான் என்று பார்ப்போம். வேதம் இங்கே இருப்பது ஒரு ஈஸ்வரன் என்று சொல்லவில்லை இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரன்தான் என்கிறது. (The Veda is not saying there is one Ishwara; its says there is only Ishwara ) .

நீ அதை பார்க்கவில்லை என்றால் அதை உண்மையில்லை என்று நிரூபிக்க வேண்டும். அது ஒரு வெறும் நம்பிக்கையை சார்ந்தது அல்ல. இது நாம் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று. நாம் புரிந்துகொண்டு விட்டோமானால் அதுவே சர்வ நிச்சயம், யதார்த்தம். இங்கே ஊகத்திற்கு வேலை இல்லை. ஈஸ்வரன் என்பது நம்பிக்கை சார்ந்த ஒரு பொருள் அல்ல. புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றேயாகும். நாம் ஈஸ்வரனை மானசீகமாகவோ, பட்டும் படாமலுமோ பாராட்டலாம். ஆனால் இங்கே நம்பிக்கைக்கு வேலை இல்லை. இங்கே எனக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. நான் எதையும் நம்ப தேவையில்லை. ஒரு பௌதீக பேராசிரியர் சக்தி-பொருண்மை (Energy-matter) என்பதை கூறுகையில் E=mc2 என்கிறார். ஒரு எம்.எஸ்.சி. மாணவன் அவர் வகுப்பில் எழுந்து எனக்கு உங்கள்மேல் நம்பிக்கையிருப்பதால் எனக்கு அந்த சமன்பாடு பற்றி புரியாவிட்டாலும் பரவாயில்லை என்பது எப்படி முட்டாள் தனமோ அப்படித்தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பதுவும். இந்த அகிலமே ஈஸ்வரன்தான் என்றால் அது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல; நாம் துருவித் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

somehoosier

ஈஸ்வரன் என்றால் என்ன ?

இங்கே நாம் காண்பதெல்லாம் பல இயற்கையாகவே உருவானவை, பல இயற்கையில் உருவான ஒன்றோடு ஒன்று புத்திசாலித் தனமாக இணைந்து காணப்படுகிறது. ஆனால் இப்படி பிணைக்கப் பட்ட ஒன்று பிணைத்தபின் பிரித்தால் பிணைப்பினால் உண்டான செயல் திறன் இருப்பதில்லை. ஒரு மோட்டார் வண்டியை எடுத்துக்கொள்வோம். அது பல பாகங்களைக் கொண்டு புத்திசாலித்தனமாக இணைக்கப் பட்டு செயல் படுகிறது. இப்படிப் பட்ட புத்திசாலிதனத்துடன் இணைக்கப்பட்டு ஒரு செயற்கையான செயல் திறனை வெளிப்படுத்துவதை நாம் சிருஷ்டி என்கின்றோம். இது ஒரு அதிசயமான நிஜம். தூக்கணாம் குருவியின் கூடு ஒரு சிருஷ்டி. மோட்டார் வாகணம் ஒரு சிருஷ்டி. இரண்டு சக்கர சைக்கிள், ஒலிபெருக்கி இங்கே உள்ள பெறும் சுவர்கள் இவை எல்லாமே ஒரு சிருஷ்டிதான். நாம் ஒரு தூக்கணாம் குருவி கூடு மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பதை காண்கையில் அது இயற்கையிலேயே கிடைக்கும் தழைகள், நார்கள் கொண்டு பின்னப்பட்டாலும் அதை நாம் ஒரு இயற்கையில் உண்டான பொருளாகக் காணவில்லை.. இந்த இயற்கைப் பொருள்கள் புத்திசாலிதனமாக பின்னப்பட்டுள்ளது. அது தானே மேலே பறந்து ஒரு கூடாக மாறவில்லை. அந்த பொருட்களை பறவை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து சாமர்த்தியமாக புத்திசாலித்தனத்துடன் இணைத்துக் கூடாக மாற்றியிருக்கிறது.

மேலும் பல இயற்கையான பொருள்கள் உண்டு. நம் கண்ணே ஒரு இயற்கைப் படைப்புதான். அது ஒரு தாய் தந்தையரால் உருவாக்கப்பட்டது அல்ல. அதுவும்கூட புத்தி சாதுரியத்துடன் பல பாகங்களைக் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. கரோனா, ரிடினா, ஆப்டிக் நர்வ் என்று சேர்ந்து அதன் செயல்பாடுகள் வியக்கதக்க அளவில் உள்ளது. நமது இருதயம் ரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு பம்ப் செய்கிறது. இந்த ரத்தம் இல்லாமல் ஒரு திசுக்களும் உயிரோடு இருக்காது, அது இறந்துவிடும். நமது இதயமே ஒரு ’பம்ப்’ (காற்றடிக்கும் சாதனம்). அது இடைவிடாது ஒருவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வேலை செய்கிறது. இதுவும் ஒரு அதிசயக்கத் தக்க உடல் உறுப்பே ஆகும். மேலும் இருதயம் ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கு தானே பம்ப் செய்வதோடு அல்லாமல் சாமர்த்தியமாக ரத்தத்தை தன்னுள்ளும் இழுத்துக் கொள்கிறது. இங்கே எல்லாவற்றைவிட உயர்வான செயல் திறன் வெளிப்படுகிறது. இது மிகவும் முக்கியமான நிஜம். அது எப்படி செயல்படுகிறது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் புரிந்துகொண்ட வகையில் இவை எல்லாமுமே ஒர் அறிவாற்றலைச் சார்ந்தது. நாம் நுண் உயிர் செல்களை பரிசோதிக்கையில் நமக்கு மேலும் பல விஷயங்கள் தெரியவருகிறது. இந்த நுண் உயிர் செல்கள் உயிரியலின் (biology) நியதிகளுக்குக் கட்டுப்பட்டது. உண்மையில் நுண் செல் என்பது ஒரு உயிரியல் அலகு. அது பொதுவான பல தன்மைகளை எல்லா நுண் செல்களிடத்திலும் கொண்டுள்ளது. ஒரு பேச்சுக்காக இந்த நுண் செல் கூறுகள் சுவாமி தயானந்தருக்கு என்று ஒரு மாதிரியாகவும் (ஏன் என்றால் அவர் சுவாமிஜி!) என்றும் மற்றவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும் என்பது உண்மையில் நிஜம் இல்லை. நமது கண்கள் பல அணுக்கூறுகளின் சேர்க்கை. காதும் அவ்வாறே, அதில் ஏதும் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த மொத்த அணுக்கூறுகளும் பல்வேறுவிதமாக இணைக்கப்பட்டு, பல்வேறுவிமான செயல்திறன்களை வெளிப்படுத்துவது என்பது ஒரு புத்தி சாதுரியத்துடன் செய்யப்பட்டுள்ளது. இப்படி அதிசயத்தக்க புத்தி சாதுரியத்துடன் இயற்கையாகவே பிணைக்கப் பட்டுள்ளவைகளை நாம் அந்த அணுக்கூறுகள் தாமே இயங்கி இணைந்தது என்று கூறமுடியாது. சலனமற்ற புத்திசாதுரியம் இல்லாத அணுக்கூறுகள் தானாகவே இயங்கி ஒன்றுபட்டு நமது கண், காது, இருதயமாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏன் இந்த மொத்த உடலே ஒரு புத்தி சாதுரியத்துடன இணைக்கப் பட்டுள்ளது. இதில் எந்த தனிப்பட்ட மனிதனின் பங்கும் கிடையாது. எனவே இது ஒரு அதிசயதக்க செயல்பாடு என்பதும், அது இந்த ஜகத்தின் ஒரு அங்கம் என்பதும் உண்மை

solar-syetem-planets

க்வாண்டம் இயற்பியலை எடுத்துக் கொண்டால், நாம் புரிந்து கொள்வது, கண் எதிரே உள்ள உலகம், இந்த பூமி, நாம் உயிர் வாழ்வதற்க்காக உண்டான இந்த உடல், மூளை, உணர்வு பாகங்கள் எல்லாமுமே ஒரு புத்தி சாதுரியத்துடன் பிணைக்கப் பட்டுள்ளது என்ற விஷயம் தான். இதுதான் சிருஷ்டி என்பதாகும். எனவே இந்த பிரபஞ்ச படைப்புகள் எல்லாம் ஆச்சரியத்தில் அமிழ்த்தும் ஒர் உன்னத சிருஷ்டியாகும். எனவே இந்த பிரபஞ்சமே ஒரு அதிசயதக்க உருவாக்கமே ஆகும். இந்த உருவாக்கம் மிகவும் சாமர்த்தியத்துடன் பிணைக்கப் பட்டுள்ளது. உருவாக்கம் என்றால் அது அறிவு சார்ந்ததே ஆகும். அறிவு இயங்கக் கூடிய ஒரு வஸ்து ஜடப் பொருளாக (inert) இருக்கமுடியாது.

அவர் நமது உணர்வுகளுக்கு புலப்படும் அறிவாற்றலை உடையவர். அவரை நாம் புரிந்துகொள்ள வேண்டும், பின் பற்ற வேண்டும். அவரை நாம் காண்கிறோமோ இல்லையோ என்பது வேறு. நாம் ஒரு அழகிய ஓவியத்தைப் பார்க்கையில் நம் கண் எதிரே ஓவியமும் அதை உருவாக்கியவர் திறமையும் மனக்கண் முன் தோன்றுகின்றன. அதைபோல நாம் இந்த பரந்த பிரபஞ்சமான, புத்தி சாதுரியத்துடன் உருவாக்கப்பட்ட ஜகத்தை கண்ணால் பார்க்கின்றோம் அதை உருவாக்கியவர் இங்கிருந்தாலும் எங்கிருந்தாலும் அவர்தான் அனைத்தும் செய்பவர் (”சர்வஸ்ய கர்த்தா”) அனைத்தும் அறிந்தவர் (”சர்வகஞ:”), எல்லா மன உணர்வுகளுக்கும் புலப்படும் இந்த சர்வசக்திமானையே நாம் சமஸ்கிருத மொழியில் ”ஈஸ்வரன்” என்றும், ஆங்கிலத்தில் God என்றும் சொல்கின்றோம்.

எங்கே கடவுள் ?

யாராவது எங்கே கடவுள் என்று கேட்ட மாத்திரத்தில், அவர்கள் கடவுள் என்பவர் உள்ளுரில் இருப்பவர் அல்லது இல்லை என்ற முடிவுடன் கேட்கிறார்கள். அவர் அப்படிக் கூறுவது அறிவு வளர்ச்சியடையாத காலகட்டத்தைச் சேர்ந்த மனிதப் பழங்குடியினர் சிந்தனையில் ஓடும் கேள்வியை போல்தான். ஒருவருக்கு கடவுள் என்பது என்ன என்று தெரியாமல் அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்கும் தகுதி கிடையாது. எனவே ஒருவர் முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஈஸ்வரன் என்பவர் நிச்சயமான, என்றும் இருக்கின்ற, அறிவாற்றல் பொருந்திய இந்த ஜகத்தை உருவாக்கவும், காக்கவும், அழிக்கவும் ஆற்றலையுடைய சர்வ வல்லமை படைத்தவர்.

எந்த உருவாக்கத்திற்கும் புத்திசாதுரியமும், பொருளும் தேவை. பொருள் இல்லாமல் எதையும் உருவாக்கமுடியாது. அது தானாகவே இயங்கி செயல்பட்டு பல உருவாக்கங்களை ஏற்படுத்த முடியாது. எனவே ஏதோ ஒரு பொருளைக் கொண்டே ஈஸ்வரன் அதிலிருந்து பல பொருட்களை உருவாக்கி இருக்கிறார். ஒரு பேச்சுக்கு கடவுள் X என்ற பொருளிலிருந்து இந்த ஜகத்தை உருவாக்கினார் என்று வைத்துக்கொண்டால், இந்த X என்ற பொருள் எதிலிருந்து வந்தது என்ற கேள்வி வரும். உடனே அது W என்ற பொருளிலிருந்து வந்தது என்றால, இந்த W எந்த பொருளிலிருந்து வந்தது என்ற கேள்வி எழும். இப்படி UV என்ற அடிக்கிக்கொண்டே A சென்றாலும் முடிவு பெறாது. கடவுள் A என்ற பொருளை அங்கிருந்து பெற்றார் என்றால், அந்த “அங்கு” என்பது ஆகாயவெளி, அந்த ஆகாயவெளியும் கடவுள் உருவாக்கத்தில் உட்பட்டதுதான், பிரபஞ்ச விஸ்தரிப்புதான். அதைபோல் காலமும் அதற்குள் இருப்பதுதான். காலமும் வெளியும் இந்த பிரபஞ்சத்திற்கு உட்பட்டதுதான் என்பதை நவீன பௌதீக ஆராய்ச்சி ஒத்துக்கொள்கிறது. எனவே உருவகப் பொருள் இங்கே, அங்கே என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஈஸ்வரன் இந்த உருவகப் பொருளை யாரிடமிருந்தோ கடனாக பெற்றிருக்க முடியாது. கடன் தருவதற்கு இங்கே யாரும் இல்லை. எல்லோருமே உருவாக்கப்பட வேண்டியவர்கள்தான். எனவே இந்த ஜகத்தின் உருவகப் பொருளும் இந்த ஜகத்தை உருவாக்கியவரும் ஈஸ்வரன்தான்.

நாம் நினைக்கின்றோம் – உருவகப் பொருளும், உருவாக்கியவரும் (படைப்புகளும், படைப்பவரும்) ஒன்றாக இருக்க சாத்தியகூறுகள் இல்லை என்று. அதைப் போன்ற உதாரணங்களை நாம் கண்டதில்லை. ஆனால் அவை ஒன்றே என்று வேதம் சொல்கின்றது. இந்த மொத்த ஜகத்தின் உருவாக்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள போதிய முன் அனுபவத்தை பெற முடியாததால், இந்த தர்க்க வாதத்தை விட்டு நாம் அதை அணுகவேண்டும். வேதம் சொல்கிறது – அதை அவர் உருவாக்கினார் அவரே அதுவாக ஆனார்(”ஸ்வயம் அக்ருத ஸ்வயம் அபாவத”). எனவே அவரே உருபொருளும், உருவாக்கியவரும் ஆவார். இதை உருவகித்துக் கொள்ள, சிலந்தியை உதாரணமாக கொள்வோம்

maxresdefault

சிலந்தி தன் வாய் உமிழ் நீரிலிருந்து இழையை உண்டாக்கி அதை உத்திரத்தின் ஒரு இடத்தில் பதித்து இழை பிரியாமல் தொங்கி கிழே மற்றொரு இடத்தில் பதியவைக்கும். இப்படி இழை ஏற்ப்படுத்திக் கொண்டு இழை பிரியாமல் மேலும் கீழும் சென்று ஒர் அதிசயக்கத் தக்க கூட்டை உருவாக்குகிறது. இங்கே சிலந்தியே உருவகப் பொருளுக்கும், உருவாக்கியதற்கும் காரணம் ஆகும். அதைப்போல்தான் இந்த ஜகமாக உருவாகும் பொருளும், உருவாக்கியவரும் ஈஸ்வரன்தான்.

வேதம் நாம் காண்கின்ற கனவை மற்றொரு உதாரணமாக சொல்லுகிறது. இந்த கனவு உலகத்தை நாம் படைக்கையில் அதற்கான பொருளையோ அதை உருவாக்குபவரையோ நாம் யாசிப்பதில்லை. நமது அறிவாற்றலின் படி நமது மனக்கண் முன்னே கனவு உலகத்தையும், பரந்த வெளியையும், கால, நேரத்தையும் நம்மால் நிர்ணயம் செய்யமுடிகிறது. விழித்ததும் அது மறைந்து விடுகிறது. மறுபடி தூங்குகையில் அதையே திரும்பப் படைக்க முடிகிறது. இவை எல்லாமே உங்களது உருவாக்கம்தான். இதையே நம் சாஸ்திரங்கள் உருவகப்பொருளும், உருவாக்குபவரும் ஒன்றே என்கிறது.

இதிலிருந்து நமக்கு ஒன்று புலப்படுகிறது, எந்த ஒரு உருவாக்கப்பட்ட பொருளும் அதன் அதன் மூலப்பொருள் அதன் உள்ளேயே இருந்தாலும் அந்த மூலப்பொருள் அதன் தன்மையை இழந்துவிடுகிறது அல்லது உருவாக்கப்பட்ட பொருள் மூலப்பொருளின் தன்மையை கொள்வதில்லை.”

நமது சட்டை ஒருவகை நார். நார் இல்லாமல் சட்டை இல்லை. நார் இழை இல்லாமல் நார் இல்லை. மூலக்கூறுகள் (Molecules) இல்லாமல் நார் இழை இல்லை. அணுக்கள் இல்லாமல் மூலக்கூறுகள் இல்லை. இப்படி முடிவின்றி சொல்லிக்கொண்டே போனாலும் நாம் இறுதியாக உருவாக்கிய பொருளிலிருந்து இவற்றைப் பிரிக்கமுடியாது.

வேதத்தின்படி ஐந்து பெரிய சக்திகளான அண்டவெளி (இதில் காலமும் அடங்கும்), காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி இவை அனைத்தும் ஈஸ்வரனுடைய ஜகத்தின் அங்கமே. நமது பௌதீக உடலும் இந்த ஐந்து சக்திகளைக் கொண்டதுதான். எனவே இந்தப் பிரபஞ்சம், நம் உடல், மூளை, உணர்வு பாகங்கள் எல்லாமுமே ஈஸ்வரனுடைய படைப்புதான்.

எனவே வேதம் கூறுகின்ற ”தீவிஸ்தன் ஸ்ர்வம் கரோதி” என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதாவது ஈஸ்வரனின் ஒளி வெள்ளத்தில்தான் இவை எல்லாமுமே தோன்றின என்பதை நாம் எல்லோருமே புரிந்துகொள்ள வேண்டும். சிருஷ்டியும், சிருஷ்டிப்பவரும் கடவுள்தான் என்பது வேதத்தின் இறுதி தீர்ப்பு. இங்கே படைப்பும் படைப்போனும் வேறு வேறு இல்லை. எனவே இந்த ஜகத் என்பது ஈஸ்வரனின் விரிவாக்கமே அன்றி உருவாக்கம் இல்லை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

(தொடரும்)              

One thought on “கடவுள் என்றால் என்ன? – 1”

  1. பிங்குபாக்: Home – Hindu Unity

பின்னூட்டமொன்றை இடுக