மணலூர் மணியம்மா

Ref : ஒரு ஊழியனின் குரல் – S.Raman – Vellore

பெண்கள் இயற்கையாகவே ஆளுமை படைத்தவர்கள்தான்.  மனித இனம் தோன்றிய காலத்திலேயும், அதற்கு முற்பட்ட விலங்காகத் திரிந்த காலத்திலேயும் பெண்கள்தான் அந்தக் குழுக்களின் தலைவர்களாக இருந்து வழி நடத்தியிருக்கிறார்கள்.  அப்படி இருக்க, இவ்வளவு நவீனம் வளர்ந்து, எல்லாவற்றிலும் பெண்கள் சரி நிகராக நடத்தப்பட வேண்டும், எல்லா வேலைகளிலும் பெண்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்கிற எண்ணங்கள் மேலோங்கியுள்ள இந்தக் காலத்திலும் இவர்களை தலைமைக்கு கொண்டுவருவதில் இன்னனும் ஒருவித தயக்கம் எல்லா மட்டத்திலும் இருக்கவே செய்கிறது.  இப்படி தலைமை பொறுப்பில் அதிகாரம் இருக்கும் பதவிகளில் இருப்பவர்களும் ஒப்பீட்டளவில் சொற்ப நபர்களாகவே இருக்கிறார்கள். அந்த சொற்ப நபர்களை நாம் விதி விலக்காகவே பார்க்க முடிகிறது.

ஏன் பெண்கள் தலைமை பொறுப்பிற்கு அதிகம் தேர்வு செய்யப்படுவதில்லை என்பதற்கான ஒரே காரணம்,  அந்தச்சமூகம் கற்பிதங்களால் உருவாக்கியுள்ள பொதுபுத்தி எனும் மாயை தான், சராசரியாக வாழ்ந்த பெண்களில் சிலர்  அப்படியான கற்பிதங்களை உடைத்தது தங்களின் சுய ஆளுமையோடு சமூகத்தில் போராடி வெற்றி கண்டார்கள், அப்படிப்பட்ட பெண்தான் மணலூர் மணியம்மா.. 

ஆங்கில நாகரிகம் பலரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. ஆண்களுக்குச் சரிநிகராகப் பெண்களும் மாறத் தொடங்கினார்கள். நாகை பகுதியில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தை முதன் முதலில் உருவாக்கிய மணலூர் மணியம்மாவின் மாற்றத்தைக் கண்டு பலரும் வாய் பிளந்தார்கள். மேல் பாக்கெட் வைத்த ஜிப்பாபோன்று தானே வடிவமைத்த உடை,  அதன் தோள் மீது துண்டு,  ஆண்களைப் போல் கிராப் வெட்டிய தலை,  தோளில் ஒரு பை, காலில் செருப்பு, கையில் ஒரு குடை,  குடையில் மறைக்கப்பட்ட ஓர் குத்துவாள், ஒற்றை காளை மாடு பூட்டப்பட்ட வண்டி என்று கீழ் தஞ்சை முழுவதும் ஒரு பெண் நிலவுடையையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும்  ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்குத் தோழமையின் அடையாளமாகவும் இருந்தவர் தான் மணியம்மா !    

மணலூர் மணியம்மா சனாதனமான பிராமண குடும்பத்தில் மூன்றாம் தாரத்தின் பிள்ளைகளில் ஒருவராகத்தான் பிறந்தார்.  இவரது இயற்பெயர் வாலாம்பாள். மணி என்பது இவரின் செல்லப்பெயர்.  பின்னாளில் அதுவே இவரது பெயராகிப்போனது.  நாகையைச் சேர்ந்த வழக்கறிஞரும் செல்வந்தருமான குஞ்சிதபாதம் என்பவருக்கு தனது பத்து வயதில் இரண்டாம் தாரமாகப் பாலிய விவாகம் செய்துவைக்பப்பட்டவர் தான் மணியம்மை. தன்னுடைய 27 வது வயதில் தன் கணவரை இழந்த மணியம்மா, அதற்குப்பிறகு தனது தாய்வீடு இருந்த மணலூரில் வந்து தங்கினார்.  தனது 17 ஆண்டுக்கால திருமண வாழ்வில் அவருக்குக்   கிடைத்தது தான் ஆங்கிலக்கல்வி. கிருஸ்துவ திருச்சபையைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண்மணி அவருக்கு ஆசிரியராக இருந்தார். அவர் மூலம் ஆங்கிலத்தோடு அவருக்கு சில முற்போக்கான கருத்துக்களும் அறிமுகமாயின.

தனது கணவர் இறந்த பிறகு ஒரு சராசரி பிராமண விதவை பெண்ணாக மொட்டை அடித்து, எல்லாவற்றிலும் ஒதுங்கி இருந்தார்.  ஆனால் அவர் படித்த ஆங்கிலமும், சீர்திருத்த கருத்துக்களும் அவரை சும்மா இருக்க விடவில்லை.  எல்லாவற்றிலும் கேள்வி கேட்கத் தொடங்கினார். அப்போது காந்தியடிகள் தஞ்சைக்கு வந்திருந்தார். அவர் உறவினரின் மூலம் காந்தியைக் காணச் சென்றார். காந்தியடிகளுடனான உரையாடல் அவரை முழுநேர அரசியல் பணிக்கு ஈர்த்தது.  அதோடு தனது மொட்டைத் தலையை கிராப் தலையாக மாற்றினார், புடவையை வேட்டி சட்டையாக்கிய அவரின் புதிய உருவத்துடன் இறக்கும் வரையில் ஒரு தலைவராகவே வாழ்ந்து மறைந்த ஆளுமைதான் மணலூர் மணியம்மா.

தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து  பணியாற்றினார்.  காங்கிரஸின் இருபெரும் கொள்கைகளான மதுவிலக்கு, அரிஜன சேவா என்கிற இரண்டையும் காங்கிரசில் உள்ளவர்களே கடைப்பிடிக்காத போது, அதைத் தீவிரமாகச் செயல்படுத்தி சேரிப்பகுதி மக்களுடன் கலந்து அவர்களின் கூலிப்பிரச்சனை உள்ளிட்டவற்றைத் தீர்த்து வைக்க உழைத்த மணியம்மாவை காங்கிரலிருந்த பெரும் நிலக்கிழார்கள் எதிர்க்கத் தொடங்கினார்கள்.  முதலில் தனது சொந்த நிலத்தில் பணியாற்றும் ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு முறையாகக் கூலியை வழங்கி, அவர்களுக்குப் பாதுகாப்பும் தந்து உதவினார்.  இது மற்ற நிலக்கிழார்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கவே, அவருக்குத் தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.  ஒரு கட்டத்தில் தனது நிலங்களையும், வீட்டையும் இழந்து வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கலானார்.

காங்கிரஸில் ஒரு கட்டத்தில் இருக்கமுடியாது என்கிற போது, அவரை ஈர்த்தது பொதுவுடைமை இயக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கீமத்தஞ்சை விவசாத் தொழிலாளர்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தீவிரமாக பணியாற்றினார். இவர் பணியின் தீவிரம் காரணமாகவே 40 களின் இறுதியிலும்,  50 களின் தொடக்கம் வரையிலும் கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சி மணியம்மா கட்சி அல்லது மணியம்மா செங்கொடி கட்சி என்று அழைக்கப்பட்டது.

தானே சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டார், தற்காப்பிற்காகச் சிலம்பம் சுற்றக்கற்றுக் கொண்டார்.  திருவாரூரில் அவர் தங்கியிருந்த அறையே கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமாக இருந்தது.  இவரது தீவிர செயல்பாடுகள் இருந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.  அப்போது பல முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மணியம்மாவும் கைது செய்யப்பட்டு கடலூர், வேலூர் சிறைகளில் பல்வேறு கொடுமைகளைச் சந்தித்தார்..இறுதியாக 1953 இல் பூந்தாழங்குடி என்னும் கிராமத்தில் ஒரு நிலக்கிழாரோடு விவசாயத் தொழிலாளர்களுக்காகப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திருவாரூர் செல்ல பேருந்திற்காகக் காத்து நிற்கையில் மான் முட்டி இறந்தார் என்று அரசு ஆவணங்கள் சொல்கிறது.

ஆனால் அன்று நடந்தது குறித்து எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் அவர்கள் 1980 களில் எழுதிய ” பாதையில் பதிந்த அடிகள் ” என்னும் நாவல் பணிக்காகச் செய்த கள ஆய்வில் கிடைத்த தகவல்தான் உண்மைக்கு நெருக்கமாக உள்ளது. பிணவாசலை சேர்ந்த நாகப்பன் எனும் விவசாயி மூலம் கிடைத்த தகவல் படி – பண்ணையார் ஒரு கலைமான் வளர்த்துக்கிட்டிருந்தார், அது அங்கே திரிந்து கொண்டிருக்கும்.  அதை ஒரு பையன் பாரமரித்தான். அவன் அந்த மானின் மூக்கில் ஒரு குச்சியை நுழைத்து அதுக்கு வெறி ஏத்தி அம்மா நடந்து வந்த பக்கமாக ஏவி விட்டதை நான் கண்ணால் பார்த்தேன். அது கொம்பால் முட்டி குடலை உருவிடுச்சு என்று சொல்லியுள்ளார். இன்றுவரை அந்தப்படுகொலையை யாரும் உறுதி செய்யவில்லை.  கீ்ழத்தஞ்கையின் போராட்ட வரலாற்றுத் தொடர்ச்சியை உற்று நோக்குபவர்களுக்கு அது படுகொலைதான் என்பது சொல்லாமலே புரியும். மணியம்மா மறைந்திருக்கலாம், ஆனால் இன்றைக்கும் அவர் விவசாயத் தொழிலாளர்களின் வாழக்கையிலும், அவர்கள் பாடும் பாடல்களிலும் மறையாமல் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்.

ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்து பத்து வயதில் திருமணமாகி, 27 வயதில் கைமைக்கோலம் பூண்டிருந்த ஒருவர், 35 வயதுக்கு மேலாக ஒரு வீரமங்கையாக உருவாக முடியும் என்றால், அதுவும் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட அந்த காலத்திலேயே உருவாக முடியும் என்றால், நம்  வீட்டில் இருக்கும் பெண்களும், நம் அலுவலகத்தில் இருக்கும் சக நண்பர்களும் இப்போதும் பெரும் போராளிகளாகவும், வீரமங்கைகளாகவும் பரிமளிக்கமுடியும். பெண்களுக்குள் இருக்கும் போராளி வெளியே வரும்போது ஆண்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், அது குறுக்கே நிற்காமல் இருப்பது.

இன்று நாட்டுப்புறப் பாடல்களில் மணியம்மா பெயர் பாமர மக்களிடத்தில் பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது – பாடல் வரிகள்

கோட்டை இடிஞ்சிவிழ

கொடிபடிச்சி அம்மா வந்தா

சாட்டையடிக்கி முன்னே

சாகசங்கள் செய்து வந்தா

மதிலுகள் சரிஞ்சுவிழ

மணியம்மா அங்கே வந்தா

பதிலுகள் கேட்டு வந்தா

பட்ட மரம் தழைக்க வந்தா

ஏழைக் குலம் குளிரும்

எங்கம்மா பேரு சொன்னா

மக்கள் குலம் குளிரும்

எங்கம்மா பேரு சொன்னா

மக்கள் குலம் விளங்கும்

மணியம்மா பேரு சொன்னா

நம்பி உழைத்தோருக்கு

நாயங்கள் கேட்டு வந்தா

கும்பி குளிர வந்தா

குரலுகளும் எழுப்பி வந்தா

பின்னூட்டமொன்றை இடுக